தஞ்சை பெரியகோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு பல நல்ல காரியங்கள் நடைபெற்றன.
அவற்றில் முக்கியமானது இக்கோயிலைப்பற்றி திரு குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதி வெளியிட்ட
ராஜராஜேச்வரம் என்னும் ஒரு அருமையான நூல்.
அந்த நூலில் பரத முனிவரின் நாட்டிய சாத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் 108 கரணங்களைப் பற்றிய செய்திகள் எழுதப்பட்டிருக்கிறன. 108
கரணங்களில் 81 கரணங்கள் மட்டுமே இக்கோயிலின் சாந்தாரத்தில் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன.
மீதமுள்ளவற்றிற்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சிற்பங்கள் வடிக்கப்படவில்லை.
மகுடாகமத்தின் வழிபாட்டு முறைகளை, வழிபடச் செல்லும் பாமரனும் உணரும் வண்ணம், அருவமாயிருக்கும்
மகுடாமகக் கோட்பாடுகளுக்கு, ஒரு உருவத்தை உண்டாக்கும் முயற்சியே, மாமன்னன் ராசராசனும்,
பெருந்தச்சன் ராசராசனும் கட்டிய கருவறை விமானம்.
அரு உருவாயிருக்கும் பரசிவ(லிங்க)ம், திரு பாலசுப்ரமணியன், சிவலிங்கத்தின் உருவ அமைப்பைப்பற்றிக்
கொடுத்திருக்கும் செய்திகளின்படி, தனது மிக உயர்ந்த நிலையில் ‘தாண்டேசுவரனா’க வெளிப்படுகிறது..
அதாவது தண்டவமாடும் ஈசுவரனாக இருக்கிறது. இந்த ஈசுவரன் தாண்டவமாடும் இடம் அங்கிங்கெனாதபடி
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இப் பேரண்டப் பெருவெளியே. எனவே, சிவலிங்கத்திற்கு
மேலே இருக்கும் வெளியை கற்களிட்டு நிறப்பாமல், விமானத்தின் உட்கூடாக பெருந்தச்சன் அமைத்திருக்கிறான்.
அப்பெருவெளீயில், சிற்சபையில் நடமிடும் ஆடவல்லானைத், தனது நான்கு கைகளில் ஒரு கையில்
தீச்சட்டியும் மற்றொரு கையில் உடுக்கையுந் தாங்கி (சிவச் சின்னம்) மீதமுள்ள இரு கைகளால்
கரணங்களைக் காட்டி ஆடுவதுபோல் சிற்பங்களை லிங்கத்திற்கு மேலிருக்கும் உட்புறச்சுவற்றில்,
அமைத்திருக்கிறான். இவ்வாறாக, அருவமான தாண்டேசுவரனின் இருப்பு (Existance) அரு உருவமான
லிங்கத்திற்கு மேலே, உருவமான உட்கூட்டுவெற்றிடப் பெருவெளியாக பெருந்தச்சனால் அமைக்கப்பட்டிருக்கிறது.
மாமன்னன் ராசராசனது விருப்பத்தினை முறையாக, முற்றிலுமாக நிறைவேற்றிய பெருமை பெருந்தச்சன்
ராசராசனைச் சேரும். “மண் புகழ் பெருமை நுங்கன் மரபினோர் புகழ்களெல்லாம் உன் புகழ் ஆக்கிக்
கொண்டாய்” என்று கம்பநாட்டாழ்வார் கூறியது போல் தமிழினத்தின் தொழில்நுட்பப் பெருமைகளை
எல்லாம் தன் புகழ் ஆக்கிக் கொண்டான் இப் பெருந்தச்சன்.
கும்பகோணத்தில் சாரங்கபாணிகோயிலிலும், தில்லையில் ஆடவல்லான் கோயிலிலும் 108 கரணங்களும்
வடிக்கப்பட்டிருக்கின்றன. கும்பகோணத்தில் சிற்பங்கள், சாத்திரத்தில் கூறப்பட்ட வரிசையில்
இல்லாவிடினும், ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் அதனதன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
தில்லையில் சாத்திரத்திலுள்ள சுலோகங்கள், ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் கொடுக்கப்பட்டிருப்பதாகக்
கூறப்படுகிறது.
காலக்கோட்டில், தஞ்சை, கும்பகோணம் மற்றும் தில்லை இவ்வரிசையில் வருகின்றன.
திரு. குடவாயில் பாலசுப்ரமணியன், தனது நூலில், கோயிலில் உள்ள சிற்பத்தின் புகைப் படங்களையும்
அவற்றின் பக்கத்திலேயே பரத முனிவரின் வடமொழி சுலோகங்களையும், அதற்கு, திருவாடுதுரை
ஆதீனப் புலவர். ச. தண்டபாணி தேசிகர் அவர்களின் “ஆடவல்லான்” எனும் நூலில் கொடுக்கப்பட்டிருக்கும்
தமிழ் மொழிபெயர்ப்பினையும் அருகருகே கொடுத்துள்ளார்.
புகைப் படங்கள் 11ம் நூற்றாண்டு சிற்பங்களினுடையவை. வடமொழியில் கொடுக்கப் பட்டிருக்கும்
சுலோகங்கள் அதற்கு முன்னரே வாழ்ந்த பரத முனியினுடையவை. தமிழ் மொழியில் அமைந்திருப்பது
சுலோகத்தின் மொழொபெயர்ப்பு. அதற்குச் சொந்தக்காரர் தேசிகர்.
”ராசராசேஸ்வரத்”தில் வரும் புகைப்படக் கரணங்களுக்கும், ”ஆடவல்லானி”ல் வரும் வரை படக்
கரணங்களுக்கும் இடையே மிகப்பெரும் வேறுபாடு இருக்கிறது; (குறிப்பாக சக்கர மண்டலம்,
அர்க்களம் எனும் கரணங்களில்.) ”ஆடவல்லானி”ல். இப்படிப்பட்ட கரணங்கள் ஆங்கிலத்தில் acrobatics
அல்லது gymnastics என்றழைக்கப்படும் உடற்பயிற்சி முத்திரைகளாகவே காணப்படுகின்றன.
பதினோராம் நூற்றாண்டிற்கும் இருபதாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் கரணங்களில்
மாறுபாடுகள் ஏற்பட்டு தரக்குறைவில் முடிந்திருக்கிறது. தாம்பாளத்தில் ஏறி நின்று ஆடும்போதே
குளிர் பானம் அருந்தும் காட்சியாக நாட்டியம் மாறியிருக்கிறது. இப்படி மாற்றம் எற்படுவது
காலப்போக்கில் இயல்பானதே என்று டாக்டர். பத்மா சுப்ரமணியம் கூறுகிறார்.
மேலும் சாரங்கபாணிக் கோயில் சிற்பங்கள் வேறு இடத்தில் இருந்து கொண்டுவந்து இங்கு பதிக்கப்பட்டவை
என்றும் கூறப்படுவதால், இச் சிற்பங்கள் மிகவும் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாக இருக்க
வாய்ப்புகள் அதிகம்.
எனவே, இவ்விரு நூல்களுக்கிடையே காணப்படும் மாறுபாடு காலமாறுபாடேயன்றி நூலாசிரியர்களின்
தவறன்று. எனினும் “ஆடவல்லான்” எனும் நூலில் உள்ள வரை படங்கள் வடமொழி நூலில் உள்ள வடமொழி
சுலோகங்களுக்கு ஏற்புடையன்வா என வல்லுனர்கள் ஆய்வு செய்து தேவையான(?) திருத்தங்களை
ஆவணப்படுத்தல் நன்று.